Thursday, July 22, 2010

நண்பன் என்றாய்....
அண்ணன் என்றாய்...
துணை என்றாய்...
இணை என்றாய்....
நலம் விரும்பி என்று கூட
எனக்கொரு பெயர் தந்தாய்.....

எனை எப்படி அழைப்பதென்ற கவலை உனக்கு....
என்ன தருவதென்ற கவலை எனக்கு....

நட்பு...
பாசம்...
அக்கறை...
என என் அன்பை எந்த பெயர் சொல்லி
நீ வாங்கி கொண்டாலும் சந்தோசம் தான்...

உனக்கு அன்பை தருவது மட்டுமே முக்கியம்
எனக்கு...

Sunday, January 31, 2010

இணைத்திருப்பது எது ?

உன்னையும் என்னையும்
பிரித்தது எதுவென்று ஒரு போதும்
நான் யோசித்ததே இல்லை....
காலங்களை தாண்டி இன்னும்
நம்மை இணைத்திருப்பது எது
என்பதே என் யோசனை....

கவிதையாய் காதலை சொன்னேன்...

கவிதையாய் காதலை சொல்வதில்
ஒரு வசதி....
சம்மதம் கிடைக்கவில்லை என்றாலும்
பாராட்டு கிடைக்ககூடும்....

Wednesday, January 13, 2010

புரிந்தது....

கண்ணீரை கண்ணுக்குள் புதைத்து...
உணர்ச்சியெல்லாம் உதடு கடித்து
மறைத்து.....
படபடக்கும் கரங்களை ஒன்றுக் கொன்று
ஆதரவாய் பற்றி.....
தட்டு தடுமாறி வார்த்தைகள் தேடி .....
விழி பார்க்க முடியாமல்
என் சட்டை பொத்தான் பார்த்து....

என்னை காதலிக்கவில்லை என்று
நீ சொன்ன போது தான் தெரிந்தது...
என்னை நீ எவ்வளவு காதலிக்கிறாய்
என்று.....

சொல்லிய மறுகணம் நான் என்னவானேனோ
என பதறி நீ என் விழி பார்த்த போது
அது உறுதியும் ஆயிற்று...

Tuesday, January 12, 2010

உனக்கென ஒரு வாழ்க்கை...

உன் அம்மாவுக்காய்....
உன் கணவனுக்காய்
உன் பிள்ளைகளுக்காய்....
உன் தேசத்துக்காய்....
ஒரு வாழ்க்கை நீ வாழ்ந்து முடித்தாயிற்று .....

உனக்கென ஒரு வாழ்க்கை
நான் இல்லாமல் எப்படி
வாழ்வாய் ?

கிறிஸ்துமஸ்....

காணாமல் போன ஆடுகளை
மீட்க தேவன் பிறந்தார்......
எல்லா வீட்டிலும் இறைச்சி
மணக்கிறது......

Monday, January 11, 2010

உன் அம்மா மேல் கோபமில்லை......

நம் காதலை பிரித்த
உன் அம்மா மேல் எப்போதும்
கோபமில்லை......

நீயும் நானும் கூட
அது காதலென உணரும் முன்
நம் காதலை உணர்ந்தவள்
அவள் தானே.....